“வஞ்சி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர். ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார். மாஸ்டர் ராஜநாயகம் மிக முக்கியமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாலர் தினா, நடிகர் கூல் சுரேஷ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் இசக்கி ராஜா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் பேசுகையில், “வஞ்சி இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு விழாவுக்கு வருகை தந்த திரையுலக ஜாம்பவான்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள், அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

விஜயமுரளி பேசுகையில், ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜநாயகம் ஒரு உதாரணம்.   வியர்வை காயும் முன்பே கூலி கொடுப்பவர் இந்த படம் கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இசை சிறப்பு, நட்சத்திரங்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இயக்குநரின் பணி திரையில் தெரிகிறது. இந்த மாதிரி சிறு முதலீட்டு படங்கள் ஓட வேண்டும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சதிஷ் சங்கர் பேசுகையில், எனக்கு அதிகம் பேச தெரியாது, தமிழ் தெரியாது, நான் கேரளாவை சேர்ந்தவன். இந்த படத்திற்கு இசையமைக்கும் போது இயக்குநர் ராஜேஷ், எலக்ட்ரானிக் இசை வேண்டாம், பாடல்கள் நன்றாக புரிய வேண்டும், கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்னது போல் பாடல்கள் வந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த ராஜநாயகம் சாருக்கு என்றார்.

இயக்குநர் மற்றும் கதாநாயகன் சி.ஆர். ராஜேஷ் பேசுகையில், இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தேன். கேரளாவில் முக்கியமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றார்.

இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், ‘சீசா’ படத்தின் இயக்குநர் நான். அந்த படத்தின் திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்த போது தான் எனக்கு ராஜநாயகம் சார் பழக்கம் ஆனார். அப்போது அங்க ஒரு பெண் இருந்தாங்க, அவங்கள பார்த்து நம்ம படத்துல அவங்கள ஹீரோயினா போடலாம், யார்னு விசாரிக்க சொன்னேன். அப்போது அவங்க மஞ்சக்குருவி என்ற படத்தில் நடித்து வருவதாக சொல்லிட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்ட பேச சொன்னாங்க. அப்போது தான் எனக்கு ராஜநாயகம் சார் அறிமுகம் ஆனார். அப்போது அவரிடம் நான் நிறைய பேசினேன். முதல் படம் என்பதால் எனக்கு ரொம்ப பதற்றமாக இருந்தது. அப்போது ராஜநாயகம் சார் கிட்ட நிறைய விசயம் கேட்டேன். எனக்கு நல்ல ஆலோசனைகள் எல்லாம் அவர் சொனார். எந்த எந்த இடத்தில் பார்த்து நடக்கனும், என்று சொல்லிக் கொடுத்தார். ரொம்ப பாசிட்டிவான மனிதர். என் படத்தில் அவர் நடிக்கனும் என்று கேட்டேன், அவர் பண்ணி கொடுத்தார். அதற்கு பணம் கூட அவர் வாங்கல. அவர் சினிமா காதலர். ஏற்கனவே ஒரு படம் பண்ணாரு. இப்ப இந்த வஞ்சி படத்துடன் மேலும் ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். நல்ல மனிதர், பாசிட்டிவான எனர்ஜி கொண்டவர், அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும், படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் ராஜேஷுக்கு வாழ்த்துகள். இந்த படத்தை தயாரித்த விமலா ராஜநாயகம் மேடமுக்கு வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான மாஸ்டர் ராஜநாயகம் பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என சிங்க குரலில், சிங்கார தமிழ் நடையில் துள்ளி குதித்து வரும் அருவி நீராய், பள்ளி குழந்தை முதல் பக்கு இடிக்கும் கிழவி வரை, சொல்லி மாலாது உன் திரைப்பணி. தீனிப்போட்டது நம் இயக்குநர் இமயம். உன் பெயரில் பாரதி இருந்ததால் என்னவோ உன் படங்களில் பெண்களுக்கு வீர உயிர் கொடுத்தாய். படித்தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் என்ற உன் வசனங்கள், உன் உடல் மண்ணில் புதைக்கும் போது என் கண்கள் குலமாகின. கல்லிப்பாலிலே தூக்கிலிடும் சிசுக்களை பள்ளியிலேயே பாடம் கற்று, பாமரணை மாற்றிய உன் உயரிய சிந்தனை, எண்ணங்கள், உன் இழைப்பை ஆழிப்பேரலை போல் அழ வைத்து சென்று விட்டாய்.

குருவையே மிஞ்சியவன் சிஷ்யன், பத்து முறை பார்த்தாலும் மறுமுறை பார்க்க வேண்டும் என்று கதையில் சூனியம் வைத்து தமிழ் மக்களை கட்டிப்போட்டவன் பாக்கியவான் பாக்யராஜ், பெண்ணியத்தை கண்ணியமாக காட்டி, பெண் நினைத்தால் மலையையும் மைல்கல்லாய் மாற்றுவார் என்று உன் படைப்புகள் தான் எங்களின் பாடங்கள். இந்த இரண்டு ராஜாக்களும் திரையில் இருந்தும், இந்த உலகில் இருந்து ஓய்வு எடுக்க சென்று விட்டீர், என் மக்களை நிலைகுனிய வைத்து விட்டீர். உங்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். உங்கள் வழியிலேயே ஒரு வீர மகளின் வாழ்க்கையை படம் பிடித்த ராஜேஷ் இயக்குநரை பாராட்ட வார்த்தை இல்லை என்று கவிதை நடையில் பேசினார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், வஞ்சி சூப்பர் டைடில். இளமையாக இருக்கும் போது பெண்கள் அழகாக இருப்பாங்க, வயது ஆகும் போது நம் மீது பாசம் காண்பித்து, அக்கறை காட்டி, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற வழியை காண்பிப்பார்கள். அப்படிப்பட்ட வஞ்சியை தலைப்பாக வைத்த குழுவினருக்கு வாழ்த்துகள்.  மனைவி, சகோதரி, பாட்டி, அம்மா என பெண்கள் பல வடிவங்களில் இருந்தாலும், அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. அப்படி ஒரு சிறப்பான படைப்பை கடவுள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் ஆவது சாதாரண விசயம் இல்லை. விமலா மேடம் மூன்று படங்கள் எடுத்திருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இசக்கி ராஜா பேசுகையில்,  தயாரிப்பாளர் விமலா மேடம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நெல்லை பாய்ஸ் என்று படம் எடுத்தேன், ஒன்றரை கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தேன், ஆனால் இன்று வரை அந்த படத்தை வெளியிட முடியவில்லை. இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு வெட்கப்படுகிறேன். எனக்கு ஓட்டுப் போட்ட தயாரிப்பாளர்களுகு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். இன்று பல படங்கள் ஓடுகிறது, ஆனால் சிறு முதலீட்டு படங்கள் ஓடுகிறதா, போட்ட பணத்தில் கால்வாசி கூட  வராது. தொழில் ரீதியாக ஒரு தயாரிப்பாளர் வருவாய் ஈட்ட முடியாத சூழ்நிலை தான் இங்கு இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த விமலா மேடம் எவ்வளவு கஷ்ட பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யவும் இங்கு யாருமில்லை. இவர்களுக்கு கடன் கொடுக்கவும் முன்வர மாட்டார்கள். பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான், இங்கு வெளியே இருந்து முதலீடு வருகிறது. சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு எந்தவித முதலீடும் வராது. இதுபோன்ற சிறு முதலீட்டு படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, எங்களுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,
சிறு சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் சிறு சிறு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர் விமலா மேடமுக்கு நன்றி. ராஜநாயகம் சார், இசையமைப்பாளர், பாடலாசிரியரை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டும் வேறு மாநிலத்தவர் என்று பார்ப்பதில்லை, அனைவரையும் கலைஞர்களாகத்தான் பார்ப்பார்கள். அதனால் தான் ராஜநாயகம் சார் மொழியை பார்க்காமல் கதையை பார்த்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷின் துணிச்சலை பாராட்ட வேண்டும். ராஜேஷ்  பயம் இல்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதை. தன் கதையின் மீது இருக்கும் நம்பிக்கை. இந்த கதையில் யார் நடித்தாலும் ஹிட்டாகும் போது, ஏன் நாம் நடிக்க கூடாது. என்ற தைரியம், அந்த தைரியத்தை பாராட்டுகிறேன்.

பெண் பிள்ளையை பெற்றவர்கள் பெருமைப்பட வேண்டும். பெண்கள் தைரியம் மிக்கவர்கள் என்பதை சொல்வது தான் வஞ்சி. பெற்றவர்கள் தான் அப்பா இல்லை. யார் பெண் மீது அக்கறை காட்டுகிறார்களோ அவர்கள் தான் அப்பா, என்ற கருத்தை சொல்வது தான் வஞ்சி கதை. பாடலாசிரியர் தமிழ் பிடித்ததால் தமிழ் பாடல் எழுதியிருக்கிறேன், என்று சொன்னார். தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ, அவர்களை எங்களுக்கு பிடிக்கும். படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். விமலா ராஜநாயகம் அவர்கள் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும், வாழ்த்துகள் என்றார்.

கதாநாயகி ஷாமல் பேசுகையில், இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறேன். சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் அது அனைவரது கனவு. எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில்,  தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் அவர்களுக்கு என் வாழ்த்துகள். மூன்று படம் தயாரித்திருக்கிறீர்கள், நான்காவது படத்தில் என்னை ஹீரோவாக போடப்போவதாக சொன்னாங்க, அதற்காக நான்  காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும், அப்ப தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இயக்குநர் ராஜேஷ் சாருக்கு வாழ்த்துகள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

வில்லனாக நடித்திருக்கும் டேன் பேசுகையில், இந்த படத்திற்காக ரொம்ப நாளாக காத்திருந்தோம். படம் என் கனவு, இந்த படத்திற்காக தான் சென்னைக்கு வந்தேன். எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். இந்த படம் வெற்றி பெற்று, தயாரிப்பாளர் தொடர்ந்து படங்கள் பண்ண வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

Exit mobile version