“பெருந்தலைவர் காமராஜ் – 2” பட விழாவில் சீனுராமசாமி புகழாரம்

தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்றுத் தலைவர், முன்னாள் முதல்வர்,  மக்கள் மனங்களில் என்றென்றும் குடியிருக்கும் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை வெள்ளித்திரையில் கொண்டு வந்த திரைப்படம் தான் “பெருந்தலைவர் காமராஜ்”. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான “பெருந்தலைவர் காமராஜ் – 2 ” தயாராகி வருகிறது.  இப்படத்தின் டிரெய்லர் & புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இப்படத்தினை இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில்.. நான் ஆரம்ப காலத்தில் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது ஒரு பொட்டல்காட்டு பள்ளிக்கூடம் பற்றியும், அதை கட்ட சொன்னது யார் என்பது பற்றியும் எடுக்க ஆசைப்பட்டேன், எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அந்த பொட்டல் காட்டில் பள்ளிக்கூடம் கட்டியவர் கர்மவீரர் காமராஜர். ஒரு படம் எடுத்தால் அதன் ஊழல் வெளிவந்து விடும் என எடுக்க விடவில்லை. ஆனால் இந்த நாட்டில் ஒரு ஆவணப்படமே முடியாத போது உண்மையாய் வாழ்ந்து இவ்வளவு சாதனை படைக்க காமராஜரால் எப்படி முடிந்திருக்கும். அவர் தன் வாழ்நாள் முழுதும் உண்மையை கடைபிடித்தவர். என் படத்தில் ஒரு வசனம் வரும் நான் காமராஜ் போல் கை சுத்தமானவண்டா என ஒரு பாத்திரம் சொல்லும் திரையில் மக்கள் அந்த வசனத்தை  கொண்டாடினார்கள். மக்கள் அவர் மீது அத்தனை அன்பு வைத்துள்ளார்கள்.

உங்களுக்கு இந்த படம் நன்றாக எடுக்க தொழில்நுட்ப ரீதியில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் கேமரா முதல் எல்லாம் நான் செய்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது காமராஜர் போல் இந்த படத்தை எடுக்க வேண்டியது தான். நம் முன்னோர்கள் எப்படி நம் ஆன்மாவை காக்கிறார்கள் என நாம் நம்புமிறோமோ, அதே போல் அவர் உங்களை காப்பார். என் படங்களில் காமராஜரை பற்றி பேசியிருக்கிறேன். இன்று அவரது பிறந்த நாள் அவரின் பிறந்த நாளில் அவரின் நினைவை போற்றும் விழாவில் பங்கு கொள்வது எனக்கு வாழ்நாள் பாக்கியம் என்றார்.

இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் பேசும்போது… காமராஜர் பற்றி முதன் முதலில் புத்தகம் மூலம் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஜாதி, மதம், இல்லை, அவரது சாதனைகளுக்கு எல்லையில்லை. அவரும் காந்தியும் ஒரே மாதிரி தான். அவர்கள் கருத்துக்களாக வந்துவிட்டால் உங்களை விட்டு போகமாட்டார்கள், அவர் செய்த சாதனைகளை நான் படம்பிடிக்கிறேன் அவ்வளவு தான். இந்த காலத்தில் மக்கள் பணத்தில் மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி கட்டுகிறார்கள் ஆனால் சாப்பிட்டாயா என கேட்க ஆளில்லை. ஒரு முதியவர் எனக்கு மூன்று பிள்ளைகள் அவர் சாப்பாடு போட்டதால் தான் பள்ளிக்கே அனுப்பினோம் என்றார். இன்று நாம் முன்னேறியிருக்க வேண்டும் ஆனால் காலையிலும் சாப்பாடு போடுங்கள் என்ற நிலைக்கு வந்துள்ளோம் இது மாற வேண்டும். காமராஜர் சாதனைகள் உலகுக்கு தெரிய வேண்டும். இந்தப்படம் அதைச் செய்யும் என்றார்.

காமராஜராக நடித்துவரும் பிரதீப் மதுரம்  பேசும்போது… 2004 ல் வெளிவந்த படம் என் அப்பா நடித்தது தான். 2005 ல் எதிர்பாரா விதமாக அப்பா தவறிவிட்டார். 2015 ல் அப்படத்தை டிஜிட்டலாக மாற்ற நினைத்த போது ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டுமென நீ அப்பா போலவே இருக்கிறாய் என என்னை நடிக்க வைத்தார்கள். முதலில் நான் மறுத்தேன் ஆனால் கட்டாயப்படுத்தியே நடிக்க வைத்தார்கள். அந்தக்காட்சியில் நடித்த போது எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள், இந்த காலத்தில் இருப்பவர்களுக்கும் காம்ராஜரை அறிமுகப்படுத்த வேண்டுமென்கிற உங்களின் முனைப்பை நான் பாராட்டுகிறேன் என்றார்.

Exit mobile version