“கோப்ரா” படத்தின் முன்னோட்டம் வெளியீடு, ரசிகர்கள் உற்சாகம்

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ” சீயான் விக்ரமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதையும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரமின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. தமிழில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். ‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். அவரால் இன்று இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.

என்னுடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

‘கோப்ரா’ படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்.” என்றார்.

Exit mobile version