நடிகர் விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் ம.பொ.சி படத்தின் துவக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் மா.பொ.சி திரைப்படத்தின் துவக்க விழா அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் படத்தை நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்குகிறார்.

இந்த விழாவில் இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, திரைப்படங்களின் பூஜை பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், விமலுக்கு நன்றி.கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார். சிறுவயதாக இருந்தாலும் இந்த கதையைக் கேட்டு தைரியமாக இப்படத்தை தயாரிக்க ஒப்பு கொண்ட தயாரிப்பாளர் சிராஜுக்கும் நன்றி. இந்த திரைப்படம் நடக்க உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணனுக்கும் நன்றி. மேலும், அன்பு சகோதரன் S Focus N.சரவணன் மற்றும் T. சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக் கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம்.

ஒருவேளை ம.பொ.சியை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப் படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும் என்றார்.

Exit mobile version