“கட்டில்” திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு !

Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது… நானும் பத்திரிகையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் தான், அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித்தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். ஒய்டு ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் பேசியதாவது.. நான் பத்திரிகையில் போட்டோ கிராஃபராக தான் வாழ்வை ஆரம்பித்தேன். நான் பத்திரிகையாளன் என்று சொல்வதில் பெருமை. லெனின் கூப்பிட்டு இந்தக்கதை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தது. சென்னை காரைக்குடி பகுதிகளில் படம் எடுத்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும் என்றார்.

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது… அந்தக்காலத்தில் காதலுக்கு, குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த் தேவா சாருக்கு ஸ்பெஷல். இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் என்றார் .

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது… இந்த வாய்ப்பைத் தந்த, சினிமாவுக்கு காட்ஃபாதராக இருக்கும் லெனின், மிக அற்புதமாகப் படத்தை உருவாக்கிய இயக்குனர் ஆகிய இருவருக்கும் நன்றி, வைட் ஆங்கிள் ரவி அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவேன் கட்டில் படம் மூலமாக அது மாறும். இந்தப்படத்தில் வைரமுத்து அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசியதாவது…
இந்தப்படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப்படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப்பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன். இ.வி.கணேஷ்பாபு, லெனின், ஶ்ரீகாந்த்தேவா, வைட் ஆங்கிள் ரவிசங்கரன் இவர்கள் நால்வரும் தான் படம் சிறப்பாக வரக்காரணம் என்றார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது…
மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன். மாண்புமிகு கலைஞர் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் ஸ்டாலினும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்துவிளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத் துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன் என்றார்.

Exit mobile version