ZEE-5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் ட்ரெய்லர் வெளியீடு !

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது… எஸ் ஆர் பிரபாகரன் உடன் ஒரு மிகப்பெரிய பயணம், செங்களம். விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை. கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது அதே போல் செங்கலமும் உங்களுக்குப் பிடிக்கும். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றார்.

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியதாவது… அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு பெரிது. அது வேறு உலகம் இது வேறொரு உலகம். இதுவும் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். இத்தொடரை மிக உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ள குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முன் இப்படைப்பைக் கொண்டு வரவுள்ளோம் என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர்  பேசியதாவது…
ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பாத்திரம் செய்துள்ளேன் என்றார்.

நடிகை வாணி போஜன்  பேசியதாவது…
ZEE5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக்கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள். ZEE5  கௌஷிக் தான் முதலில் இந்தக் கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி என்றார்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்  பேசியதாவது… அமீரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். கௌஷிக்கிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள், ZEE5 ஆல் தான் இந்தப்படைப்பு உருவானது அவர்களுக்கு என் நன்றிகள். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம் என்றார்.

இயக்குநர் அமீர்  பேசியதாவது…
இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரெய்லர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ZEE5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப் படைப்பாக அமையும் என்றார்.

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது

Exit mobile version