“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது…இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். இப்படிபட்ட படைப்பை அளித்த இயக்குநர் முத்தையாவிற்கு மிகவும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் பேசியதாவது.. இந்தப்படம் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்தப்படத்தில் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ உறவுகளைச் சம்பாதித்துள்ளோம். ஆர்யா மிக மிக நல்ல மனிதர் என்பதை இதில் உணர்ந்தோம். இந்தப்படத்தை இந்த வாய்ப்பை தந்த முத்தையாவிற்கு நன்றி. இந்தப்படம் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த மாதிரி இருக்கும் என்றார்.

நடிகர் நரேன் பேசியதாவது… எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இது மாதிரி கதாப்பாத்திரம் நான் இதுவரை செய்ததில்லை. இது ஒரு புது அனுபவமாக இருந்தது.. இந்தப் படத்தில் எல்லோரும் உண்மையாகவே ஒரு குடும்பம் போலத் தான் இருந்தோம், படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியடையும் என்றார். மேலும் நடிகை மீனா பேசியதாவது.. இயக்குநர் முத்தையா சாரை பற்றிப் பல நல்ல விஷயங்கள் உள்ளது. அதில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

நாயகி சித்தி இதானி பேசியதாவது…
என்னுடைய முதல் படம் வெந்து தணிந்தது காடு படத்திற்கு, நீங்கள் நல்ல ஆதரவு கொடுத்தீர்கள் அதே போல் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும், அனைவருக்கும் மிகவும் நன்றி மகிழ்ச்சியாக உள்ளது படத்தை தியேட்டரில் வந்து அனைவரும் பார்க்க வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.

இயக்குநர் முத்தையா பேசியதாவது…
இது என்னுடைய எட்டாவது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன் , படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும், படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது , நிறைய நகரப் படங்கள் வருகிறது, இந்த கிராமத்து மண் படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார், மிகவும் நன்றி, படம் மிகவும் அருமையாக வந்துள்ளது உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகர் ஆர்யா பேசியதாவது.. முத்தையா பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு, இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் இந்தக் கதையோடு திரும்ப வந்தாரு. அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும், நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி. ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க. எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Exit mobile version