“ராயர் பரம்பரை” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீடு

CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வினில் பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான் கிருஷ்ணாவுடன் இணைந்து பணிபுரிகிறேன் அவரின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், இசையமைப்பாளர் எனக்கு பெரும் ஒத்துழைப்பு தந்தார், இன்று மட்டுமில்லை ஆரம்பக் காலங்களிலிருந்தே எனக்கு உதவியாக இருந்தார், பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

தமிழ்மகன் இளங்கோ பேசியதாவது,
இந்தப் படக்குழு அனைவரும் மிக எளிமையான மனிதர்கள் , அனைவருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஒரு விடா முயற்சியாளர், இந்தப் படம் அவரது முயற்சிக்கு ஒரு நல்ல பலனாக இருக்கும் என்றார் .

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
ஒரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குநர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது என்றார்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசியதாவது, இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன், அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன், அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது, படம் சுந்தர்‌.சி யின் காமெடி படம் போல இருக்கிறது, கண்டிப்பாக வெற்றி பெறும். மனோ பாலா மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

கதாநாயகி கிருத்திகா பேசியதாவது,
இது எனக்கு முதல் படம் , படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றார் .

இயக்குநர் ராம்நாத் T பேசியதாவது,
நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது, கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது, இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது அது தான் இந்தப் படம் உருவாக காரணம், கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் , இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும், படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படம் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது,
மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம் , தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார், இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்றார் ,

தயாரிப்பாளர் சின்னசாமி பேசியதாவது,
நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன், ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன், படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற புது குழுவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்,

நடிகர் கிருஷ்ணா பேசியதாவது…
கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். ஃபுல் ஹீயூமர் படம், நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும் கப்பல் சின்ன சாமி தான் அவருக்கு நன்றி. எல்லா படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது, அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இவர் படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார் என்றார்.

Exit mobile version