“காடப்புறா கலைக்குழு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.

தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது… எங்கள்  விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது.  ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் என்றார்.

கலை இயக்குநர் இன்பா பேசியதாவது…
இந்தப் படம் ஒரு முக்கிய கலைப்படைப்பு , நீண்ட நாள் இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்றது, நாம் அனைவரும் பழைய கலைகளை மறந்து கொண்டு வருகிறோம் , இந்தப் படம் நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி பேசியதாவது.. இந்தப்படம் கலை இயக்குநர் சொன்னது போல் ஒரு நல்ல கலை நோக்கத்துடன் எடுத்துள்ளார் இயக்குநர். அவர் இந்தப் படம் ஒரு தேர் எல்லோரும் சேர்ந்து தான் இழுக்கனும் என்பார். இந்தப்படத்தை இங்கு இழுத்து, கொண்டு வந்துவிட்டோம். இனி நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

நடிகை ஸ்வேதா ரமேஷ் பேசியதாவது..
இது எனக்கு முதல் படம் , எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவைத் தர வேண்டும், படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்றார் .

நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசியதாவது.‌. எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள்.  இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் என்றார்.

சிறப்பு விருந்தினர் நீலமேகம் பேசியதாவது…
இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் குழுவிற்கும் எனது நன்றிகள். கள்ளக்குறிச்சி பக்கத்தில் எடுத்தவாய்நத்தம் எங்கள் கிராமம். இயக்குநர் எங்கள் ஊர்ப்பக்கம் படம் எடுக்கனும் என்றார்.  கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப்படக்குழு பணியாற்றினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளேன் என்றார்.

டெலிபோன் ராஜா பேசியதாவது…
இன்றைய காலகட்டத்தில் ஜாதியை வச்சுத்தான் படமெடுத்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள். முனிஷ்காந்த் இந்த படத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது,
நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம், அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்,  இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றார்.  

நடிகை சுவாதி முத்து பேசியதாவது..
முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும்  நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்றார்,

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..
எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷ் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார் என்றார் .

இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது,
முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள், முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்றார்.

நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது,
இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.  இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி.  நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள் என்றார்.

Exit mobile version