நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் “நானி-32” அறிவிப்பு வெளியீடு !

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார். தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்துள்ளது. டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் நானி-32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனான “ஓஜி” படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். சூர்யாவின் சனிக்கிழமை படப்பிடிப்பு முடிந்தவுடன், நானி-32 படத்தின் பணிகள் துவங்கும். இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில் “இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு, இந்த லவ்வரிடம் வருவார் #Nani32 என்று மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார்.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு, ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. இது தனித்துவமானதாக இருக்கும் அதே நேரத்தில் புதிரானதாகவும் அமைந்துள்ளது. நானியின் 32வது திரைப்படம் 2025 இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

Exit mobile version