தனுஷ் இயக்கும் இட்லி கடை

தனுஷ் இயக்கி, நடிக்கும் 52-வது படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அண்மையில் வெளியான அவரது 50-வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே இயக்கினார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது 52-வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமும், தனுஷின் ஒண்டர் பால் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. படத்தில் தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிவிப்பு போஸ்டரை பொறுத்தவரை மிகவும் சிம்பிளாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தி சாயும் மாலை பொழுதில் தூரத்தில் விளக்கு ஒளியில் இட்லி கடை ஒன்று இருக்கிறது. அதன் உள்பக்கம் ஒருவரும், வெளிப்புறம் ஒருவரும் நின்றுக்கொண்டிருக்கின்றனர். மிக மெல்லிய எழுத்தில் படத்தின் டைட்டில் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான ‘ராயன்’ படத்தில் பாஸ்ட் புட் கடைகாரராக தனுஷ் நடித்திருந்தார். தற்போது இட்லி கடையை மையப்படுத்தி படத்தை இயக்கி வருகிறார்.

Exit mobile version