இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய “நடிகை ராதிகா”

திரையுலகில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பல ஆண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ராடான் மீடியா வொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான நடிகை ராதிகாவின் சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கௌவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றதோடு தனது உரையையும் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகை ராதிகா “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இந்த விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், எனது குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஐக்கிய இங்கிலாந்து தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2022 நடிகை ராதிகா இங்கிலாந்து தமிழ்த்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்குள்ள தமிழ்த்துறைக்கு ஒரு லட்சம் ரூபாய் க்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினரிடம் வழங்கினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர்கள் www.tamilstudiesuk.org என்ற தளத்தில் சென்று வழங்கலாம்.

Exit mobile version