பா.ரஞ்சித் தலைமையில் மதுரையில் கூடிய “தலித் எழுத்தாளர்கள்”

திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வாரலாற்று மாதமாக கலைத்திருவிழா, ஓவியக் கண்காட்சி, திரைப்பட விழாக்கள், மற்றும் புகைப்பட கண்காட்சி என தொடர்ந்து நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து மதுரையில் தலித் எழுத்தாளர்களுகான கூட்டம் உலகத் தமிழ்ச்சங்கம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது…

தலித் எழுத்துக்கள் தான் என் திரைப் பயணத்திற்கு துவக்கமாக அமைந்தது. உலகளவில் கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், இலக்கியம் மற்றும் என் வாழ்வின் வாயிலாக என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து புறக்கணிகப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைமுறை முழுக்க முழுக்க கலையோடு பின்னிப் பிணைந்தது.

ஆரம்பத்தில் தலித் இலக்கியம் என உருவான கால கட்டத்தில் ஏராளமான கேள்விகள் எழுந்தன. ஆனால் தற்போது தலைத்தோங்கி வளரத் தொடங்கியுள்ளது. அந்த வளர்ச்சியை சுய மதிப்பீடு செய்வதற்காகத் தான் இந்த கூட்டம் உதவும். முன்னெப்போதும் இல்லாத வகையில், தலித் இலக்கியம் பௌத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது,

தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்கள் குறித்து மட்டுமே பேசாமல், நேர்மறையான அம்சங்களையும் அதன் நேர்த்தியையும், பேசுவதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம் என்று பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version