
நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது,
எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த ‘கூரன்’ படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்திருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.
இந்த கூரன் படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது. இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும் ? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார் ? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப்படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும்; குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும் குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர், வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள் ! இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.