பின்னணி இசையால் படைப்புகளை உயிர்ப்பிக்கும் – சாம் சி.எஸ்

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான “சாணி காயிதம்” படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் படத்தின் பின்னணி இசை குறித்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ… அதேபோல் அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. நடிகர்கள் மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர் தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி இயக்குனர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும் துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்பித்து வருகிறார்.

சாணி காயிதம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில், “மலர்ந்தும் மலராத”… என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து வடிவமைத்த நீளமான காட்சிகள் பலவற்றுக்கு பார்வையாளர்களை சோர்வடையச் செய்யாமல் கதை மீது கவனத்தை செலுத்த இவரது பின்னணி இசை முதன்மையான காரணியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து “அடங்கமறு”, “அயோக்கியா”, “கைதி” என பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சாம் சி.எஸ் நம்மிடம் கூறுகையில்… இயக்குனர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும்போது பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றி விடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக பயணிக்க வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள் ஆகியவற்றை துல்லியமாக முடிவு செய்த பிறகு என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குவேன். இயக்குனர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் செவிமடுத்து பின்னணி இசையை தொடர்கிறேன். ரசிகர்களின் ரசனையையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஒரு ஒலியை வழங்கும் போது அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். மெட்டுகள் அமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாவதும் இயல்புதான் என்றாலும் வெற்றிகரமான பாடல்கள் அமையவேண்டும் என்பதுதான் இறுதி இலக்கு. மேலும் என்னுடைய அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு என்றென்றும் ஆதரவளிக்கும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Exit mobile version