வேட்டைக்கார கருப்பசாமியாக.. துவம்சம் செய்யும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிப்பில், சூர்யா, த்ரிஷா, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கருப்பு”.

கதைப்படி.. கேரளாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக தந்தை, மகள் ( இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ) இருவரும் ரயிலில் சென்னை வந்து இறங்குகிறார்கள். மர்ம கும்பல் அவர்களின் உடமைகளை பறித்து செல்கின்றனர். அதில் 60 பவுன் தங்க நகைகளும் அடக்கம். பின்னர் வழக்கம்போல் காவல்துறையினர் 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாகவும், அதனை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர்.

சென்னை ஏழுகிணறு நீதிமன்றத்தில் பேபி கண்ணன் ( ஆர் ஜே பாலாஜி ) என்கிற வழக்கறிஞரை சந்திக்கின்றனர். அவர் நீதிபதி முதல் குமாஸ்தா வரை அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தையே ஆட்டிப்படைக்கிறார். நகையை மீட்டுத்தராமல் பெரியவரின் பணத்தில் பிரியாணி உள்ளிட்ட தங்களுக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அவரையே செய்ய வைக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பெரியவர் கோர்ட் வளாகத்தில் உள்ள கருப்பசாமி சிலையில் மிளகாய் அரைத்து பூசி நகையை மீட்டுத்தர வேண்டுகிறார்.

பின்னர் சக்திவாய்ந்த வேட்டைக்கார கருப்பு ( சூர்யா ) களத்தில் இறங்கி, பேபி கண்ணனை துவம்சம் செய்கிறது. அப்போது இங்கே காசு இல்லாமல் எதுவும் நகராது. ஏன் கடவுளே வந்தாலும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்கிறார் பேபி கண்ணன். அதன்பிறகு வழக்கறிஞர் சரவணனாக நீதிமன்றத்திற்குள் நுழைகிறார் கருப்பு.

அதன்பிறகு நகையை மீட்டு அந்தப் பெண்ணின் மருத்துவ சிகிச்சை நடைபெற்றதா ? லஞ்சம், அராஜகம் ஒழிக்கப்பட்டு சாமானியர்களுக்கு நீதி கிடைத்ததா ? என்பது மீதிக்கதை..

படம் துவங்கி சூர்யா வரவில்லையே என நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு, லேட்டா வந்தாலும், புதுவிதமான அட்டகாசமான தோற்றத்தில் அசத்துகிறார் சூர்யா. பாலாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட நடிகனுக்கு சொல்லவா வேண்டும் ? அவரது தோற்றம், நடிப்பு பிரமாதம்.

ஆனால் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ள ஆர் ஜே பாலாஜியின் தோற்றம், நடிப்பு, பேசும் உடல்மொழி அனைத்தும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது. துணை கதாபாத்திரத்தில் அவரை பார்க்கும்போதே சகிக்காது. இதில் சூர்யாவுக்கு வில்லனாக வேறு நடித்திருக்கிறார். கொடுமையிலும் கொடுமை. இவருக்கு பதிலாக நட்டி நடராஜ் அல்லது எஸ் ஜே சூர்யா போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் தயாரிக்கும் ஒவ்வொரு படமும், தெளிவான திட்டமிடல், நேர்த்தியான செயலாக்கம் உறுதியான நம்பிக்கையுடன் உருவாக்குபவர் என பெயரெடுத்தவர். ஆனால் பேபி கண்ணன் கதாப்பாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜியை தேர்வு செய்ய என்ன நெருக்கடி என தெரியவில்லை. அதேபோல் சூர்யாவும் எப்படி சம்மதித்தார் என்பதும் தெரியவில்லை.

வழக்கறிஞராக த்ரிஷா அவ்வப்போது வந்து போகிறார். அவரை சரியாக பயன்படுத்தவில்லையா ? அல்லது பயன்படுத்த தவறிவிட்டாரா இயக்குனர் ? என்பது தெரியவில்லை.

நீதிபதியாக நட்டி நடராஜ், அமைச்சராக வேலா ராமமூர்த்தி, இந்திரனஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Exit mobile version