கமல்ஹாசனுக்கு விருது வழங்கி கௌரவித்த தெலுங்கானா முதலமைச்சர்

‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசனின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, ‘சாகர சங்கமம்’ மற்றும் ‘சுவாதி முத்யம்’ போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி, இந்த விருதை கமல் ஹாசனுக்கு வழங்கினார்.

இன்று ‘பான் இந்தியா சினிமா’ (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் ஆரம்ப காலத்தில் செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக உள்ளது. அவரது புதுமையான கதைக்களன்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவைத் தொடர்ந்து செதுக்கி வருவதையும் இந்த விருது கௌரவித்தது.



