“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”.
வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம்  திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது,
‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு. கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. விதார்த் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.

இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது. ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்ச ரீதியாகவும் மிகவும் வலுவான படைப்பாக உருவாகியுள்ளது என்றார்.

நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை. ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது.
‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம் என்றார்.

நடிகர் KPY சரத் பேசியதாவது,
வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் நன்றி என்றார்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது என்றார்.

நடிகர் த்ரிகுண் பேசியதாவது,
இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது என்றார்.

இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது, ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.
அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.

ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் என்றார்.

நடிகர் கலையரசன் பேசியதாவது,
‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.

இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன. ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

நடிகர் விதார்த் பேசியதாவது, இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.
இயக்குநரை எனக்கு  பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும் என்றார்.

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button