“டார்க்” படத்தின் விமர்சனம்

எம்.ஜீ. ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே பாபு தயாரிப்பில் அஜய் கார்த்திக், பிரியதர்ஷினி, நட்டி நடராஜ், பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டார்க்”.
கதைப்படி.. ஒரு வீட்டில் மூன்று இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவன் இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தீயை கொளுத்தி இறந்து போகிறான். சில நாட்கள் கழித்து, சென்னைக்கு வேலை தேடி வரும் விக்னேஷ் ( அஜய் கார்த்திக் ) மூன்று மாதங்கள் தங்குவதற்காக வீடு தேடுகிறார். வீட்டின் உரிமையாளர் பாக்யராஜ் கடன் சுமையால் வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட முடிவு செய்கிறார். ஆனால் இந்த வீடு பேய் வீடு என அப்பகுதியில் பிரபலமானதால் யாரும் வீட்டை வாங்குவதற்கு முன்வரவில்லை. கடன்காரர்களும் நெருக்கடி கொடுக்கிறார்கள். அந்த சமயத்தில் விக்னேஷிற்கு வீடு பிடித்துப்போக, தன் நிலையை எடுத்துக்கூறி பாக்யராஜ் மிகவும் குறைந்த வாடகைக்கு சம்மதிக்கிறார்.

அதன்பிறகு இரவு நேரங்களில் ஒவ்வொரு நாளும் மர்மமான முறையில் ஏதேதோ நடக்கிறது. விக்னேஷ் தூங்க முடியாமல் தவிக்கிறார். வீட்டு உரிமையாளரின் நிலையை உணர்ந்து, அவருக்காக பொறுத்துக் கொண்டு சமாளித்து வருகிறான். ஒருநாள் பாக்யராஜ், விக்னேஷ் இருவரும் இறந்து கிடக்கிறார்கள். அதனை விசாரணை செய்ய போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் ( நட்டி நடராஜ் ) வருகிறார். திடீரென விக்னேஷ் எழுந்து பாலகிருஷ்ணன் இங்கிருந்து போய்விடு என கூறி மயங்கி விழுகிறார். அதிர்ச்சியில் உறைந்து போன நட்டி நடராஜ் விசாரணையை தொடர்கிறார்.
இருவரும் எப்படி இறந்தார்கள், அதன்பின் இருக்கும் மர்மம் என்ன ? காவல்துறையினர் விசாரணையில் உண்மை வெளிவந்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

நாயகன் அஜய் கார்த்திக் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் பிரியதர்ஷினி குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பாக்யராஜ், நட்டி நடராஜ் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களே மிரளும் அளவுக்கு திரைக்கதையை அமைத்த இயக்குனர், பல இடங்களில் குழம்ப வைத்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி எளிமைப்படுத்தி இருக்கலாம்.
