“பேச்சி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின்  சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், ’பேச்சி’ உருவான விதமே ஒரு அனுபவமாக இருந்தது. படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் விளம்பர பட இயக்குநர், அவருடன் நான் பல விளம்பர படங்களில் பணியாற்றியுள்ளேன். அப்படி நாங்கள் பணியாற்றிவிட்டு ஏற்காடுக்கு செல்வோம், அங்கு தான் இந்த கரு உருவானது. பிறகு இதை படிபடியாக டெவலப் செய்து திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தோம். இந்த படம் உருவாக முக்கியமான நபர் கோகுல் பினாய். ஒளிப்பதிவாளராக பல படங்கள் செய்திருக்கும் அவர், நண்பர்களுக்காக இந்த படத்தை பண்ணார். பல பேர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு ஒரு துறையில் முதலீடு செய்து நல்லபடியாக வாழ்கிறார்கள். ஆனால், கோகுல் பினாய் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தான் தொடங்கினோம். பிறகு படத்தின் பட்ஜெட் அதிகமானது. படத்திற்கு தேவைப்பட்டதால் அதை நாங்கள் செய்தோம். எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அது அனைத்தையும், பட்ஜெட் பார்க்காமல் செய்து கொடுத்தார்கள், அதனால் தான் படத்தின் அவுட்புட் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தின் நிலப்பரப்பு மிக கடினமானது, இதில் எதையும் எளிதில் செய்ய முடியாது. அதனால் அனைவரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

நடிகர் முரளி ராம் பேசுகையில், “இத்தனை கேமராக்கள் எங்கள் நிகழ்ச்சியை கவரேஜ் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு படம் பெஞ்ச் மார்க் படமாக அமையும். அதாவது, ‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள், நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும். அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும்.  இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய மனதோடு பணியாற்றினார்கள், ஒவ்வொருவரும் தங்களது சொந்த படம் போல வேலை பார்த்தார்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என்பதற்காக நானே கேட்டு தான் சேர்ந்து கொண்டேன். நான் இரண்டு நாட்கள் பணியாற்றினேன். இயக்குநர் ராமச்சந்திரன், வங்கியில் நல்ல பதவியில் இருந்தார், ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். அதேபோல், அவரது குடும்பத்தாரும் அவரது ஆசையை புரிந்துக்கொண்டு அவரை இந்த துறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறைய விளம்பர படங்களை செய்தார். இப்போது படம் பண்ண வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர், கோகுல் பினாய் என அனைவருமே அவரிடம் இருந்து வந்தவர்கள், அவரது தம்பிகள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அனைத்து தம்பிகளும் சேர்ந்து அண்ணனுக்காக இந்த படம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். படத்தை வெளியிடும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசுகையில், ’பேச்சி’ என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். முதல் நன்றி நான் கோகுலுக்கு தான் சொல்ல வேண்டும். நாங்கள் விளம்பர படங்கள் எடுக்கும் போது சேலம் சென்றால், அப்படியே ஏற்காடு சென்று வருவோம். அப்படி ஒரு பயணத்தின் போது, நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சாதாரணமாக பேசியது தான் இந்த பிரஸ் மீட்டில் வந்து நிற்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் ஒரு பக்க கதையாக எழுதியதை தான் நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அது தான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம்.

ஒரு படம் தனக்குத் தேவையானதை தானாகவே எடுத்துக்கொள்ளும் என்று சொல்வதைப் போல், இன்று பேச்சி படம் வெரூஸ் என்ற புதிய நிறுவனத்தை திரையுலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர்கள் மூலம் படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வெரூஸின் முஜிப் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தொழில்நுட்ப குழிவினர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பார்த்தியின் உழைப்பு மிகப்பெரியது. படத்தின் டிரைலரை பார்த்த போதே அதைப் பற்றி பலர் பேசுகிறார்கள். அதேபோல் என்னுடைய படத்தொகுப்பாளர் அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். எங்களது படத்தை நாங்கள் அப்படி… இப்படி… என்று சொல்லவில்லை. அதேபோல் நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் உங்களை புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும் என்பது உறுதி என்றார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனும், வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சஞ்சய் சங்கர் பேசுகையில், நான், முஜீப், ராஜராஜன், தனிஷ்டன் நான்கு பேரும் சிறுவயது முதலே நண்பர்கள், நாங்கள் தான் ஒன்றாக சேர்ந்து வெரூஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். வெரூஸ் என்றால் இத்தாலியில் பிரண்ட்ஸிப் என்று அர்த்தம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். அதன்படி, ‘பேச்சி’ திரைப்படத்தை பார்த்த முஜீப் எங்களை தொடர்புகொண்டு படத்தை பார்க்க சொன்னார், நாங்கள் படத்தை பார்த்தோம், படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கின்றன. அதேபோல், திகில் காட்சிகளும், ஒலி வடிவமைப்பும் மிரட்டலாக இருந்தது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதனால் தான் இந்த படத்தின் மூலம் நாங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற நல்ல திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

வெரூஸ் நிறுவனத்தின் முஜீப் பேசுகையில், இந்த படம் நண்பர்களுக்காக நண்பர்கள் தயாரித்தது என்று சொன்னார்கள், வெரூஸ் நிறுவனமும் நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான். எங்கள் நிறுவனம் மூலம் பொழுது போக்குத்துறையில் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதன்படி, இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, படத்தை பார்த்த உடன் நான் இந்த படத்தின் தயாரிப்பாளராக முடிவு செய்துவிட்டேன். கோகுல் பினாய் உடனான முதல் சந்திப்பிலேயே அவருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டேன். இந்த படம் மட்டும் இன்றி மேலும் ஒரு படத்தை நாங்கள் முடித்து வைத்திருக்கிறோம், அந்த படம் பற்றி விரைவில் அறிவிப்போம். மேலும் பல படங்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளோம். படக்குழுவினர் எந்த அளவுக்கு பரபரப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து நான் பிரமித்துவிட்டேன், அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில், வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் கோகுல் பினாய், விக்னேஷ், விஜய் கந்தசாமி இவர்கள் எல்லாம் என்னுடைய நண்பர்கள், இவங்க மூன்று பேருக்கும் நன்றி. வெரூஸ் நிருவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சங்கர், முஜீப் ஆகியோருக்கும் நன்றி. இயக்குநர் ராமச்சந்திரன்  பைக் டிராவல் ஆர்வலர், அவரைப் போன்றவர்களால் தான் இதுபோன்ற இடங்களை கண்டுபிடிக்க முடியும். இந்த இடங்களுக்கு சாதாரண வாகனங்களில் பயணிக்க முடியாது. இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக எங்களுடன் வனத்துறை காவலர்கள் வருவார்கள், அவர்களுக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது, என்றார்கள். அப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எங்களை அங்கே அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்படி ஒரு கடினமான நிலப்பரப்பில் படப்பிடிப்பு நடத்தியதற்கு எங்கள் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படத்தை எடுப்பதற்கு இரண்டு படங்கள் எடுத்து விடலாம், அந்த அளவுக்கு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் நாம் இறங்கிவிட்டோம் என்றால், அது பிக் பாஸ் வீடு தான். எந்த ஒரு தொடர்பும் இருக்காது. அப்படி ஒரு இடத்திலும், எங்களுக்கு உணவு சரியான நேரத்தில் வந்துவிடும். வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் சில சமயங்களில் உணவு வருவதில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆனால், இப்படி ஒரு இடத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் எங்களுக்கு அனைத்தையும் சரியான நேரத்தில் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, நான்கு நண்பர்களில் ஒரு வேடமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம், படத்தில் இருந்த வேற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை அவரிடம் கேட்கலாமா என்று யோசித்த போது, அவரே நீங்க மாரி வேடத்தில் தான் நடிக்கிறீங்க, என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது. நான் காமெடி வேடம் மட்டும் இன்றி அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாரி கதாபாத்திரம் இருக்கும். மற்றவர்கள் சொன்னது போல், இந்த படம் இதுவரை பார்க்காத படம், என்று சொல்லவில்லை. இன்று ஆடியன்ஸ் ரொம்ப திறமையானவர்களாக இருக்கிறார்கள், உலகத்திரைப்படங்கள் பார்க்கிறார்கள், அதனால் அப்படி இப்படி என்று சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. ஆனால், ‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இது முழுக்க முழுக்க திகில் சஸ்பென்ஸ் படம். இப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று ஏங்கும், ரசிகர்களுக்கு இந்த படம் செம படமாக இருக்கும். இன்று டிரைலர் பார்த்து பலர் பாராட்டுகிறார்கள், நல்ல நல்ல கமெண்ட் வருகிறது. அதுபோல் படமும் நிச்சயம் ரசிகர்களிடம் பாராட்டு பெறும். இப்படி ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கே இருக்கும், அப்படி ஒரு படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் தேவ் பேசுகையில், நான் இங்கே நிற்பதற்கு காரணம் கோகுல் பினாய் மற்றும் ராமச்சந்திரன் தான், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறேன், இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.  பார்த்திபன் சொன்னது போல் நண்பர்களுக்காக நண்பர்கள் பண்ண படம். பாலசரவணன் சொன்னது போல், இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிக கடுமையான நிலப்பரப்பில் உருவாகியிருக்கும் படம். என்னதான் கஷ்ட்டமாக இருந்தாலும் தயாரிப்பு தரப்பு எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார்கள், அதற்காக வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனங்களுக்கு நன்றி. திகில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், தயாரிப்பாளராக எனக்கு இது முதல் மேடை. ஒளிப்பதிவாளராக பண்ணையாரும் பத்மினியும் தான் எனது முதல் படம். நான் இங்கு நிற்பதற்கு என் பெற்றோர்கள் தான் காரணம். நான் சினிமாவுக்கு போகப் போகிறேன், மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு, பிறகு கேமராமேனாக பணியாற்ற செல்லப் போகிறேன், என்று சொன்ன போது என் பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள். இப்போது படம் தயாரிக்கப் போகிறேன், என்று சொன்ன போதும் எனக்கு சப்போர்ட் பண்ணார்கள், அவர்களுக்கு நன்றி. அதேபோல், எனது சகோதரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி. என் சகோதரி தான் இந்த படம் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு கொடுத்தார். அதேபோல், என் குருநாதன் மனோஜ் பரமஹம்சாவுக்கு நன்றி. இன்று நான் தயாரிப்பது என அனைத்தும் அவரிடம் இருந்து வந்தது தான். நான் முதல் படம் முடித்துவிட்டு இரண்டாம் படம் பணியாற்ற இரண்டு வருடங்கள் சும்மா இருந்தபோது, எனக்கு பொருளாதார ரீதியாக உதவியது ராமச்சந்திரன் அண்ணாவின் விளம்பர படங்கள் தான், அதற்கு அவருக்கு நன்றி. அதேபோல் வெயிலோன் நிறுவனத்தை தொடங்கும் போது என் நண்பர்கள் என்னுடன் இணைந்துக்கொண்டார்கள். அது தான் இப்போது தயாரிப்பு நிறுவனமானது. இதன் மூலம் ராம் அண்ணா மூலம் படம் எடுக்க முடிவான போது, வேறு கதையை படமாக்கலாம் என்று இருந்தோம். ஆனால், அவருக்கு திகில் கதை நன்றாக வருவதால் அதையே படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து, அவருடைய பேச்சி குறும்படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button