வயது வந்தோர்க்கு மட்டுமே எடுக்கப்பட்ட “ரா.. ரா.. சரசுக்கு ராரா..” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது.. வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும், தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது கத்தி, வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும். படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் இருந்து வந்திருக்கிறார். அதை என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது, நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது. சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன். நான் சிறு வயது முதல் ரஜினி ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன். சந்திரமுகி ‘ படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன். சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.

இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று. இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம். தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள். இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம். அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன.
ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார். படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை “60 கட் டைரக்டர் “என்று கூறுகிறார்கள்.

நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள். படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை. ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம். ஆனால் சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள். நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி செல்லுங்கள், இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள்.

ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார். லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம்.

பல மணி நேரம் காக்க வைத்தார்கள்.
பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள், ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.
அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள். நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான்.
ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.
விளக்கிப் பேசும்போது
கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள். கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள். நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .

சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .

ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம். யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா?
என்றோம், ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள். அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம் ? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம். இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா? தயாரிப்பாளர் தந்தை போன்றவர். அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ? ஏமாற்ற முடியுமா?படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை, ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம் என்றார்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும்போது, இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன. ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும் .விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்தப் பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள். சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள். இந்தப் படத்தை வெளியிடும் விநியோகஸ்தரும் தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள்.

இது ஒரு அடல்ட் படம் இது இப்படித்தான் இருக்கும். இதை ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை. பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள். இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். அவர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள், இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.

இப்போது பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம் பேசுகிறார்கள். இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி, எதற்கெடுத்தாலும் கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது . பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .

அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம். அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

சினிமா விழாக்களில் போர்த்தப்படும் இந்தப் பொன்னாடைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ராஜஸ்தான் காரர்களுக்குத்தான் வியாபாரம் நடக்கும்.அந்தப் பொன்னாடையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. அவை பயனற்றவை எதற்கும் பயன்படாது. நமது தமிழ்நாட்டின் நெசவாளிகள் பயன்பெறும் வகையில் கைத்தறி ஆடை வாங்கி போர்த்திடுங்கள். அதன்மூலம் அவர்களை வாழ வையுங்கள். என்று பேசினார்.

விழாவில் விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன்,
படத்தின் இசை அமைப்பாளர் ஜி கே வி , எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குநர் ராமச்சந்திரன், சண்டை இயக்குநர் ராஜாசாமி, பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம்,
படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர் 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button