கோபி நயினார் குமுறல்

தமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். நயன்தாரா நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக நடிகையை மையமாக வைத்து படம் எடுத்தும் பெரிய ஹிட்டை கொடுக்கலாம் என்ற டெம்ப்ளேட்டை கோபி நயினார் உருவாக்கினார். அந்தப் படத்திலிருந்து நயன்தாரா பார்வை மாறியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. ஆனால் கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று பெரிய சட்டப் போராட்டமே கோபி நயினார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் அறம் படத்துக்கு பிறகு அவர் ஜெய் நாயகனாக நடிக்கும் கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. கோபி நயினார் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இதில் வடசென்னையின் அசல் முகங்களையும், வாழ்வியலையும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது. தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

இதற்கிடையே அவர் இப்போது ஆண்ட்ரியா நடித்து வரும் மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெய்லர் எப்படி? –

வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகள் நடக்கின்றன. அவரை நோக்கி தொடர் கேள்விகள் எழுப்படுகின்றன. விசாரணை அதிகாரிகளாக நாசர், தமிழ், ஹக்கிம் ஷா வருகின்றனர். இடையிடையே வரும் வசனங்கள் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன.

“ஒரு பொண்ண அடிக்கிறது தப்புங்குற குற்றவுணர்வு இல்லாதவன் கூட எப்படி மேடம் வாழ்றது?”, “எங்க பேர எங்க விருப்பபடி எழுத விடமாட்டீங்களா?”, “சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன்”, “ஒரு விளையாட்டுல வெறும் இந்தியனா எப்டி பதில் சொல்ல முடியும்?” என வசனங்களால் ட்ரெய்லர் நிறைகிறது.ஆன்ட்ரியாவை மையப்படுத்தியே மொத்தக் காட்சிகளும் நகர்கிறது. பெரியார் புகைப்படம், ராமசாமி பெயர் ஆகிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

படத்தில் ஆண்ட்ரியாவுடன் நாசர், பாலாஜி சக்திவேல், தமிழரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதில் இடம்பெற்ற வசனங்களை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலும் என்னை கண்டுகொள்வதே இல்லை. ஹீரோயின்கள்தான் மதித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஆனால் யாரை வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் இங்கு சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது.

அறம் கதையை கேட்டதும், ஒரு குழந்தையை மீட்க இங்கே எந்தவொரு தொழில்நுட்பமுமே இல்லை என்பதை தெரிந்ததும் நயன்தாரா உடனே படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதேபோல் மனுசி கதையின் மையக்கருவை புரிந்துகொண்ட ஆண்ட்ரியாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்” என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button