“சிறை” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார்  நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.

பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடைபெற்ற  வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,
இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.

இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.

தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,
இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது.

இயக்குநர் சுரேஷ் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக  சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது.  இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது.  இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.

எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றார்.

நடிகர்  LK அக்‌ஷய் குமார்  பேசியதாவது.., இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது  அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.

ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

இயக்குநர் சுரேஷ் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது.., இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு  ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.

இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு. நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.

சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது.., இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு,  எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழும், சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர், உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.

இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம் என்றார்.

தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது.., முதலில் தமிழ் இந்த கதையை சொல்ல வந்தபோது, இந்த படத்தை கண்டிப்பாக அக்ஷய் தான் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு அவரிடம் ‘நீங்களே இந்த படத்தை இயக்கப் போகிறீர்களா ? என்று கேட்டேன். ஆனால் அவர் ‘இந்த கதையை நான் இயக்க முடியாது, கதையை மட்டும் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் சுரேஷ் இந்த படத்தில் இணைந்தார். சுரேஷ் இணைந்த பிறகு இந்த கதையை எப்படி ஒரு புதிய முறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம். பின்னர் விக்ரம் பிரபுவிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப் பற்றி விவரமாக பேசினார்.

அதேபோல் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி. அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், இந்த படத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார். இசை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.

அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம். சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான். ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன். இந்த பயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவி செய்தார். இன்று இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button