“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

BV புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது, ஜெய்யுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின் மிகச் சிறிய விவரங்கள் வரை என்னுடன் விவாதிப்பார். ‘இதை எப்படிச் செய்தீர்கள் ?’, ‘இப்படிச் செய்தால் எப்படி இருக்கும் ?’ என்று அருமையான ஆலோசனைகளை வழங்குவார். இப்போது இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டும். அவரிடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவரது வேகமான முடிவெடுக்கும் திறன். அவருடைய பிசினஸ் பின்னணி காரணமாக இருக்கலாம்; எந்த விஷயத்திலும் உடனே தெளிவான முடிவை எடுப்பார். நான் இதுவரை பணியாற்றிய பல இயக்குநர்கள் நீண்ட நேரம் யோசிப்பார்கள். பலரது கருத்துகளால் முடிவுகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் பாபு விஜய் அப்படியில்லை. அவர் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது; அவர் நினைத்தாலும் கூட மாற்ற முடியாது. அந்த அளவுக்கு உறுதியான முடிவெடுப்பவர். அது எங்களைப் போன்ற டெக்னீஷியன்களுக்கு வேலை செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. நான் ஒரு டியூன் கொடுத்துவிட்டால், அது சரியானது என்று நம்பினால் மீண்டும் தேவையற்ற விவாதங்கள் இருக்காது. இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்களுக்கெல்லாம் மிகவும் சுலபமாக இருக்கும். அதையும் தாண்டி அவருக்கு மிகச் சிறந்த இசை ரசனை உள்ளது. அவர் ரசித்து மகிழும் இசையை இந்தப் படத்தில் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு என்னை அணுகினார். ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, வெளியீட்டிற்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதல் படத்திலேயே அதைச் சாதித்திருக்கிறார் என்றார்.

நடிகர் கதிர் பேசியதாவது, இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். படம் முழுவதும் ஜெய் ஒரு ஆற்றலோடு நடித்திருக்கிறார்.
அதிலும் முக்கியமாக, படம் சரியாக முடிந்து, ரிலீஸ் ஆகும் நிலைக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு படத்தில் நடித்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமென்றால் படம் வெளியாவதே முக்கியம். அந்த விஷயத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சி. மீனாட்சி மேம் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறீர்கள். படத்தில் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது, இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு இசையமைப்பாளர், கவிதைகளுக்கும் வரிகளுக்கும் உண்மையான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்பெரிய சந்தோஷம். சாதாரணமாக ஒரு மெட்டு கிடைத்தாலே போதும், அதற்குள் வரிகளைப் பொருத்திவிடலாம் என்ற மனநிலை பல இடங்களில் இருக்கும். ஆனால் வரிகளை ரசித்து, படைப்பாளிகளையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் இசையமைப்பாளர்கள் மிகவும் அரிது. அந்த வரிசையில் இன்று மிக அழகாக வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். தமிழ் வரிகளையும், கவிதைகளையும் அவர் ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று ‘சட்டென்று மாறுது வானிலை’, இன்னொன்று ‘உயிரே’. அந்த இரண்டு பாடல்களையும் நாங்கள் சேர்ந்து உருவாக்கினோம். மீதமுள்ள ஒரு பாடலை வேறு குழுவாகச் சேர்ந்து எழுதியிருந்தார்கள். அப்போது கூட நாங்கள் சிரித்துக்கொண்டே, ‘அந்த ஒரு பாடலையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று சொன்னோம். ஆனால் அவர்கள், ‘இது நாங்கள் கூட்டமாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற பாடல், இதற்குள் நீங்கள் வராதீர்கள்’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்கள்.

அந்த முழு அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாபு விஜய்யை பார்க்கும்போது என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவரது எளிமை. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஒரு பக்கம் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கலை உலகத்தில் முழுமையாக இறங்குவது மிகவும் கடினம். பொதுவாக ஒருவருக்குக் கணக்குப் பார்ப்பதிலோ அல்லது கலையை ரசிப்பதிலோ தான் முழு கவனம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு உலகங்களையும் சமநிலையுடன் கையாண்டு, இப்படத்தை ஒரு அழகான படைப்பாக உருவாக்கியிருக்கிறார். இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதே ஒரு திருவிழா போல ஆகிவிட்டது. எல்லாமே பிரிந்து போயிருக்கும் இந்த காலத்தில், முகத்தைப் பார்த்துப் பேசும் ஒரு அருமையான வாய்ப்பைப் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.

ஜெய்யைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்க்கும்போதெல்லாம் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தையைப் போலவே தோன்றுவார். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்தைத்தனமான குணம் இருக்கும். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் மிகவும் பெரிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக வெட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுமையான நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் சொற்களும் கொண்ட பாடல்கள் வருவது அரிது. அந்த வகையில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை மீனாட்சி பேசியதாவது,
ஜெய்யிடன் இது என்னுடைய இரண்டாவது படம். மீண்டும் அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அதேபோல் ரிச்சர்ட் சாருக்கு ஒரு சிறப்பு நன்றி. எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றிகள் என்றார்.

இயக்குநர் சசி பேசியதாவது, பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர் ?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. முதல் படமே இயக்கி, அதையும் தானே தயாரிப்பது ஏன் இந்த அளவுக்குப் பெரிய பரீட்சை என்று தோன்றியது. அவர் எத்தனை நாட்களில் படத்தை முடிப்பீர்கள் என்று சொன்னபோதும் எனக்கு ஒரு பயம் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை எப்படி அந்த அளவுக்குத் தரமாக முடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இன்று டிரெய்லர், பாடல்கள், அவற்றின் விஷுவல்ஸ் எல்லாம் பார்த்த பிறகு நான் உண்மையாகவே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கிறேன். ஒரு இயக்குநராக இதைப் பார்த்து மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவிற்குத்தான். ரிச்சர்ட் இல்லாமல் இந்த அளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தரமான காட்சிகளை உருவாக்குவது சாத்தியமே இல்லை. அவருக்கு உண்மையாகவே ‘ஹாட்ஸ் ஆஃப்’. அதேபோல் கிரிஷின் இசையும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக பாரதியார் பாடலில் ராப் கலந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.
பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பாஃப்டாவில் (BOFTA) வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் சில மாணவர்கள் மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பாபு விஜய். அவர்கள் எக்ஸாம், டெஸ்ட்டுக்காக எடுத்த குறும்படங்களே, ‘இவர் யார் ?’ என்று எங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அந்த மாதிரி நான் குறிப்பாக நினைவில் வைத்திருந்த மாணவர்தான் இவர். அவருடைய படம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் ஒருமுறை இந்தக் கதையின் மையக் கருத்தை மட்டும் என்னிடம் சொன்னார். அது மிகவும் இயல்பான, நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்த ஒரு கருத்தே இந்தப் படத்தை வெற்றிகரமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் அப்போதே நம்பினேன்.
மாணவராக இருந்தபோது பாபு விஜய் என்னிடம் எப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினாரோ, அதே எதிர்பார்ப்பை இந்த டிரெய்லரும் பாடல்களும் மீண்டும் கொடுத்திருக்கின்றன. ஜெய்யின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாபு விஜய்க்கும், இந்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் முருகதாஸ் பேசியதாவது, இன்று பாபு விஜய்யின் முதல் இயக்கம் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படம் வெளியான போது நான் எவ்வளவு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தேனோ, அதே உணர்வை இன்று பாபு விஜய்யிடம் பார்க்கிறேன். பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் தெரியும். ஆரம்பத்தில் வேலைக்கு அழைக்கும் போது நல்ல சம்பளம் பேசிவிடுவார். ஆனால் படம் முடியும் நேரத்தில் தான் புரியும், அவர் எல்லோரிடமிருந்தும் மூன்று மடங்கு உழைப்பை வாங்கியிருப்பார். அது அவருடைய அர்ப்பணிப்பு.
எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் வெளியானபோது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு பெரிய பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தன. போலீஸ் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் கொண்ட காரில் அமைதியாக உட்கார்ந்து காசி தியேட்டர் அருகே நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார்.

இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல, இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஜெய் பற்றியும் சொல்ல வேண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்போது இது மூன்றாவது முக்கியமான கூட்டணி போல இருக்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாக அமைய வேண்டும். ஜெய் மிகவும் நல்ல நடிகர். அவருடைய காமெடி டைமிங் அருமை. திரையில் மட்டுமல்ல, நேரில் பேசினாலும் அதே நகைச்சுவை உணர்வு இருக்கும். மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒரே குருவிடம் நடனம் கற்றவர்கள். அதனால் அவரை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன், பாபு விஜய் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பாபு விஜய் பேசியதாவது, எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒரே ஒரு நபர் A.R. முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையே இல்லை. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக ஒரு படம் வேலை செய்தாலே போதும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு பைத்தியக்காரமான அன்பு. நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுடைய வீட்டில் பெரிய பிரச்சனை வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது. குறிப்பாக உதவி இயக்குநர்களுக்காக. இன்று நான் இங்கே நிற்பதற்கும், இந்தப் படம் உருவானதற்கும் காரணம் நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான்.

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. முதலில் ரிச்சர்ட் சார். உண்மையில் இந்தப் படம் இந்த அளவுக்குத் தரமாக வந்ததற்கு மிகப்பெரிய காரணம் அவர். நான் முதலில் அவரை அணுகவே இல்லை. பெரிய கேமராமேன், சின்ன படம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கே விஷயம் தெரிந்து அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ‘நான் இந்தப் படம் பண்ணுறேன்’ என்றார். அது பெரிய விஷயம், இன்று வரை அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. ‘நீங்கள் முதல் முறையாகத் தயாரிக்கிறீர்கள். பணம் முக்கியமில்லை’ என்று சொல்லிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஒரு கேமராமேன் மாதிரி அல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகி மாதிரி வேலை பார்த்தார். இந்தப் படத்துக்கு அவர் செய்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
இசையமைப்பாளர் கிரிஷ், அவர் ஒரு நல்ல லிஸனர் (Listener). நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குச் சரியான இசையைத் தருவார். நாங்கள் சொல்ல முடியாத உணர்வுகளை இசையாக மாற்றிவிடுவார். கதாநாயகி மீனாட்சியை முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இந்தக் கதைக்குச் சரியானவர் இவர்தான் என்று தோன்றியது. அவரைத் தொடர்பு கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார்கள். அவருக்கும் என் நன்றி.

ஜெய் சார் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி. நடுவில் சில பிரச்சனைகள் வந்தாலும், அமைதியாக விளக்கிப் பேசினால் உடனே புரிந்துகொள்வார். ஒரு ஹீரோவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார். கேரவனுக்குப் போனால் நேரம் ஆகிவிடும், லைட்டிங் மாறிவிடும் என்று நினைத்து, அங்கேயே உடை மாற்றிக்கொள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். அவர் ஒரு சிறந்த நடிகர். உண்மையாகச் சொன்னால், அவரை இன்னும் முழுமையாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்லை, என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். படம் பார்க்கும்போது எனக்கே தோன்றியது, ‘இவரை வைத்து இன்னும் எவ்வளவு பெரிய கதைகள் செய்யலாம்!’ என்று. அந்த அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிகவும் ஒத்துழைப்பானவர்.
அவரைப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில சம்பவங்களை வைத்து அவரைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர்.
அனைத்து டெக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது வெறும் வேலை இல்லை, அன்போடு செய்த வேலை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் ஜெய் பேசியதாவது: இயக்குனர் முருகதாஸ் ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார். ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.
‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார். அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் வேறு ஒருவர் பற்றிப் பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளர்தான் நமக்கு வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே புரிந்துவிட்டது. சரியான ஆள் கிடைத்துட்டார் என்று. அந்தப் பாடல் AirPods-ல் கேட்கும்போது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது. அதனால் தான் பாடல் வெளியான உடனே மில்லியன் கணக்கில் பார்வைகள் போனது.
எடிட்டரும் அதே மாதிரி மிக நேர்த்தியாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம்.
முக்கியமாக ரிச்சர்ட் சார்… ரொம்ப நன்றி சார். உங்கள் உழைப்பை நினைத்தாலே எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொல்வோம். ஆனால் காலை 8 மணிக்குப் போய், மாலை 5:30-க்கு ‘சன்செட்டில் இன்னொரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து, அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும். அவரை கேமராமேனாக அறிவித்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அப்போதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம் கேமராமேன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அதைப் பார்த்தவுடன் ‘வாவ்’ என்று தோன்றியது. அதே தரமும், ஃப்ரேமிங்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள், இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன். ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.
இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார். ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார். கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். ஒரு முதல்பட இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்.
இப்படம் வரும் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



