பூஜையிடன் கோலாகலமாக படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழு !

காவ்யா புரொடக்சன்ஸ் மற்றும் S2 மூவிஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே. ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார்.

விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசுகையில்.
இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகர் மெல்வின் பேசியதாவது..,
இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது.. ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.
இயக்குநர் செந்தில்நாதனின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன் என்றார்.
வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது.., ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது.., இயக்குனர் செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை மதுவந்தி பேசியதாவது.., இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி. இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

நடிகை அஸ்மிதா பேசியதாவது..,
‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது.., ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

நடிகை ரச்சிதா பேசியதாவது..,
இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும். இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம். போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்றார்.

இயக்குநர் சங்கம் சார்பில் R V உதயகுமார் பேசியதாவது.., இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.
இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.
வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது.., இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது.., இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.



